
கரூர் நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு பணி வழங்கியதை ரத்து செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்குவது தொடர்பான அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரூரில் தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்பட்டது. இதற்கு எதிராக நாம் தமிழர் கட்சி தீரன் திருமுருகன், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சீனி அகமது உட்பட 3 பேர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனுத் தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்களில், ‘கரூர் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையை உச்ச நீதிமன்றம் நியமித்த குழு கண்காணித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது விசாரணையை பாதிக்கச் செய்யும். இது கரூர் சம்பவத்தின் சாட்சிகளை கலைக்கும் நடவடிக்கையாகும்.
போட்டித் தேர்வு, தகுதி அடிப்படையில் தான் அரசுப் பணி வழங்கப்பட வேண்டும். அதை விடுத்து ஒரு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கினால், இதுபோன்ற சம்பவங்களில் உயிரிழப்பவர்களும் அரசு வேலை கேட்கும் நிலை ஏற்படும்.
தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் மக்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படவில்லை. இதனால் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்குவது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். எனவே சிபிஐ விசாரணை, உச்ச நீதிமன்ற விசாரணை முடியும் வரை அரசு வேலை வழங்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.
மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தற்காலிக பணியே வழங்க வேண்டும். இப்பணி இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த மனுக்கள் நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் அமர்வில் இன்று (ஜூலை 27) விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில், ‘காவல் துறை சரியாக கையாளாததால் கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. உயிரிழந்த 41 பேர் மீதும் எந்த தவறும் இல்லை. அவர்களின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்கியது அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது.
அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு தான் அரசு வேலை வழங்கும் விவகாரத்தில் அரசு செயல்பட்டுள்ளது. ஸ்டெர்லைட், மதுரை கவுன்சிலர் லீலாவதி கொலை வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட்டுள்ளது.
விதிகளை பின்பற்றியே கருணை பணி வழங்கியிருப்பதால் ரத்து செய்ய வேண்டியதுள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்,’ எனக் கூறப்பட்டது.
மனுதாரர்கள் தரப்பில், “கரூர் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்களில் 31 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. கருணை அடிப்படையில் பணி வழங்கியதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. கருணை பணி வழங்கும் போது அரசியலமைப்பு சட்டத்தின் படியே இருக்க வேண்டும்.
கருணை பணி தொடர்பாக உச்ச நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இதை பின்பற்றியே கருணைப்பணி வழங்கப்பட வேண்டும். இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை. எனவே அரசு பணி வழங்கியதை ரத்து செய்ய வேண்டும்,” எனக் கூறப்பட்டது.
பின்னர் நீதிபதிகள், “கருணை பணி வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் கரூர் நெரிசில் சிக்கியவர்களுக்கு அரசு பணி வழங்கியதில் பின்பற்றப்படவில்லை.
அரசு நினைத்தால் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு திறன் பயிற்சி வழங்கி வாழ்வாதாரத்தை உயர்த்த முயற்சிக்கலாம். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு சாதாரண பணி தான் வழங்கியதாக கூறுவதை ஏற்க முடியாது. எனவே கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கி பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது” என உத்தரவிட்டனர்.
