
புதிய அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டிட வளாகம் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகம் கடும் இட நெருக்கடியில் இருப்பதால், தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவையை வேறு இடத்துக்கு மாற்ற நீண்ட காலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ராணுவத்துக்கு சொந்தமான புனித ஜார்ஜ் கோட்டையில்தான் தற்போது தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை இயங்கி வருகின்றன. அங்கு தலைமைச் செயலகத்தை விரிவாக்கம் செய்ய இந்திய தொல்லியல் துறை அனுமதி அளிப்பதில்லை. இதனால் இன்றும் கடும் இடநெருக்கடியில் தலைமைச் செயலகம் இயங்கி வருகிறது.
இந்நிலையில், கடந்த 3-ம் தேதி சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் விஜய், “நவீன வசதிகளுடன் கூடிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டிட வளாகம் சென்னையில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்” என தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது, சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டிட வளாகம் அமைப்பதற்கான இடம் மைலாப்பூர் நகரப் பகுதிக்கு உட்பட்ட பட்டினப்பாக்கத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலங்களை கையகப்படுத்தி சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டிட வளாகம் அமைப்பதற்கு கொள்கை அளவிலான ஒப்புதலை அரசு அளித்துள்ளது.
மேலும், இதற்கான விரிவான திட்ட அறிக்கையை மூன்று மாதங்களுக்கும் சமர்ப்பிக்க பொதுப் பணித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
