
இலட்சக்கணக்கான மக்கள் செய்த தவறு தற்போது கோடிக்கணக்கான மக்களை துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாற்றம், ஏமாற்றமாக மாறி இருக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்து உள்ளார். சென்னை, திருவான்மியூரில் கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் அமிர்தம் இல்லத் திருமண நிகழ்வில் பங்கேற்று பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், லட்சக்கணக்கான மக்கள் செய்த தவறு கோடிக்கணக்கான மக்களை துன்புறுத்தி கொண்டு இருக்கிறது என குறிப்பிட்டார்.History
தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டு மக்கள் இன்றைக்கு பட்டதாரிகளாக, படித்தவர்களாக உருவெடுத்துள்ளதற்கு காரணம் யார் என்பதை இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அது தெரியாமல்தான், மாற்றத்தைத் தேடி, ஏமாற்றத்தை அடைந்திருக்கிறார்கள், இந்த நிலை மாற வேண்டும் என்றார். அரை நூற்றாண்டிற்கு முன்பு அத்திப்பூத்தாற் போல், ஒரு குடும்பத்தில் படித்தவர்கள், பட்டதாரிகள் இருப்பார்கள். ஆனால், இன்றைக்கு ஊருக்கு ஊர், வீட்டிற்கு வீடு பட்டதாரிகளும், மருத்துவர்களும் இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் திராவிட இயக்கம் தான். வீடுதோறும் பட்டதாரிகளை உருவாக்கிய திராவிட இயக்கம். இந்த உண்மையை இன்றைக்கு இருக்கும் இளைஞர்கள் தெரிந்து கொள்ள மற்றும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
இதனிடையே இந்த நிகழ்வில் பேசிய தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் மற்றும் எம்.பி-யான ஆ.ராசா, பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் அரசியலில் கிரக பிரவேசம் நடத்திய பிறகுதான் தமிழர்கள் தங்கள் வீட்டிற்கு வெள்ளை அடித்துக்கொண்டார்கள். அறிவாலயம் தோன்றிய பிறகுதான் தமிழ்நாடு தனக்கு வெள்ளை அடித்துக்கொண்டது. அந்த அறிவாலயத்தை குறைசொல்லும் தறுதலை கூட்டம் இன்றைக்கு தமிழ்நாட்டை ஆட்சி செய்து வருகிறது. அவர்களை விரைவில் விரட்டியடிப்போம் என்றார்.
