செட்டிநாட்டு அரசர் குடும்பத்தைச் சேர்ந்த குமார ராணி முனைவர் மீனா முத்தையா மறைவு…

செட்டிநாட்டின் குமாரராணி மற்றும் ராணி சாஹிப் என்று போற்றப்படும் இவர், தஞ்சாவூர் கலைகளின் சிறந்த புரவலராகவும் (Patron) விளங்கியவர். செட்டிநாடு ராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் பேத்தியான ராஜா சர் முத்தையா செட்டியாரின் மருமகள் ஆவார். செட்டிநாடு அரச குடும்பத்தின் மூத்த இளவரசரைத் திருமணம் செய்ததன் மூலம், அந்த வம்சத்தின் இளவரசியாகத் திகழ்ந்தார். குமாரராணி மீனாமுத்தையா ஆச்சி அவர்கள் இன்று[02/05/2026] அதிகாலை ஊட்டியில் சிவபதவி அடைந்து விட்டார்கள். அவ‌ர்களது ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
செட்டிநாட்டு அரசர் குடும்பத்தைச் சேர்ந்த குமார ராணி முனைவர் மீனா முத்தையா மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதல்வரின் இரங்கல் செய்திக்குறிப்பில்:

செட்டிநாட்டு அரசர் குடும்பத்தைச் சேர்ந்த குமார ராணி முனைவர் மீனா முத்தையா மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். கலைச்சேவை, கல்விச் சேவை இரண்டையும் தமது வாழ்வின் இருபெரும் இலட்சியங்களாகக் கொண்டு வாழ்ந்த பெருமைக்குரியவர் மீனா முத்தையா.
தஞ்சாவூர்க் கலைக்குப் புத்துயிர் கொடுத்து, அதற்காகவே குமார ராஜா முத்தையா கலை மற்றும் கைவினைக் கலைப் பள்ளியின் மூலம் பயிற்சியும் அளித்து வந்த அவரது பணிகள் என்றென்றும் நினைவுகூரப்படும். தனிப்பட்ட முறையிலும் எங்களது குடும்பத்துடன் இனிய நட்புறவைப் பேணி வந்த அவர், எனது துணைவியாரின் நூல் வெளியீட்டு விழாவிலும் 2018-ஆம் கலந்துகொண்டு உரையாற்றியதை இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்.
மீனா முத்தையா மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

SSC: மத்திய அரசு வேலை வாய்ப்பு: 3003 பணியிடங்கள்: 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..

Recent Posts