
‘நான் முதல்வன்’ திட்டம் தமிழ்நாட்டில் ஒரு பெரும் புரட்சியை அமைதியான முறையில் உருவாக்கி வருகிறது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் புகழ்பெற்ற காக்னிஸன்ட் நிறுவனம் தனது தன்னார்வலர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், வேலைவாய்ப்புக்கான நான் முதல்வன் திட்டத்தின் (இரண்டாம் கட்டம்) மூலம் 4 வார பயிற்சிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
முதல் கட்ட பயிற்சியின்போது தமிழ்நாட்டின் 27 அரசு பொறியியல் கல்லூரிகளைக் சேர்ந்த 5,688 பொறியியல் மாணவர்களுக்கு 194 தன்னார்வலர்கள் மூலம் வேலைவாய்ப்புக்கான பயிற்சியை வெற்றிகரமாக அளித்துள்ள காக்னிஸன்ட் நிறுவனம், இந்த முறை காஞ்சிபுரம்-திருவள்ளூர்-சென்னை-செங்கல்பட்டு மாவட்டங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு தனது நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கானப் பயிற்சியை அளிக்கவிருக்கிறது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் அங்கமான நான் முதல்வன் திட்டத்தில் காக்னிஸன்ட் அவுட்ரீச் இணைந்திருப்பதால், அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட அரசு பொறியியல் கல்லூரிகள், தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் பயிற்சியினைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.
இதுபோல தமிழ்நாட்டில் உள்ள மற்ற பல நிறுவனங்களும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சியளித்து வருகின்றன.
கல்வி சிறந்த தமிழ்நாட்டில் உயர்கல்வியுடன், நிறுவனங்களுக்கேற்ற திறன் மேம்பாட்டுப் பயிற்சி, உயர் ஊதியம் கொண்ட வேலைவாய்ப்பு என இளைய சமுதாயத்திற்குத் தேவையானவற்றை வழங்கி, ஒவ்வொரு குடும்பத்திலும் விடியல் வெளிச்சத்தைப் பரவச் செய்கிறது மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு.
ஆர்ட்ஸ் காலேஜ்தானே என்று கேட்ட காலம் மாறி, அவர்களும் ஆற்றல்மிகு காலேஜ் ஸ்டூடன்ஸ்களாகி, ‘நான் முதல்வன்’ என்கிறார்கள் பெருமிதத்துடன்.

9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி படிப்புகள், அவை தொடர்பான வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களை எளிதில் பெறும் வகையில் வழங்குவதே நான் முதல்வன் இணைய முகப்பின் நோக்கமாகும். மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வுகள், கல்வி உதவித்தொகை, கல்விக் கடன் குறித்த உடனடித் தகவல்களும் இங்கு கிடைக்கும்
நான் முதல்வன் இணைய முகப்பில் 2000க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களும், இந்நிறுவனங்கள் வாயிலாக பெறக்கூடிய 300க்கும் மேற்பட்ட தொழில் சார்ந்த வழிகாட்டுதல்களும் அடங்கும். நாடு முழுவதும் உள்ள 150-க்கும் மேற்பட்ட உயர்கல்விக்கான உதவித் தொகைகளின் தகவல்களும் இந்த இணைய முகப்பில் உள்ளன.
திட்டத்தின் நோக்கங்கள்
நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கம், ஆண்டுக்குப் பத்து இலட்சம் இளைஞர்களைப் படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குதல் ஆகும்.
திட்டத்தின் சிறப்பம்சங்கள்
இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பது ஆகும். அடுத்தடுத்து அவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படிப் படிக்கலாம் என்றும் வழிகாட்டப்படும்.
தமிழில் தனித் திறன் பெற சிறப்புப் பயிற்சியுடன், ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசுவதற்கும், நேர்முக தேர்வுக்கு தயாராவது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படும்.
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு Coding, Robotics போன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். ஒவ்வொரு துறையிலும் தலைசிறந்த சாதனையாளர்களைக் கொண்டு கோடை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.
இவற்றைத் தவிர, மனநல மருத்துவர்கள், உடல்நல மருத்துவர்களைக் கொண்டு திடமான உணவு வகைகள் உட்கொள்வது குறித்து ஆலோசனைகள் வழங்குவதுடன், உடற்பயிற்சி, நடை, உடை, நாகரீகம், மக்களோடு பழகுதல், ஆகியவை குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படும். தமிழ் பண்பாடு, மரபு குறித்த விழிப்புணர்வும் மாணவ, மாணவியர்களிடம் ஏற்படுத்தப்படும்.
இப்பயிற்சிகள் அனைத்தும், தலைசிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு நேரடிப் பயிற்சி, இணைய வழிப் பயிற்சி, அவரவர் கல்லூரியில் பயிற்சி, மாவட்ட ரீதியாக பயிற்சி என தேவைக்கேற்ப பயிற்சிகள் அளிக்கப்படும். ஒவ்வொரு பள்ளியிலும் வழிகாட்டி ஆலோசனை மையம் உருவாக்கப்படும். இதற்கென தனியே கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தொடர் வகுப்புகள் நடத்தப்படும். முன்னாள் மாணவர்களைக் கொண்டு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தொடர் நெறிப்படுத்தும் (Mentoring) முறையும் அறிமுகப்படுத்தப்படும். கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்யை உறுதி செய்ய அவரவர் விருப்பத்திற்கேற்ப அயல்நாட்டு மொழிகள் (Foreign Language) கற்பிக்கப்படுவதற்கு இத்திட்டத்தில் வழிவகை செய்யப்படும்.
அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் Industry 4.0 தரத்திற்கு உயர்த்தப்படும். மாணவ, மாணவியர்களின் தகுதி மற்றும் ஆர்வத்திற்கு ஏற்ப, நாட்டின் தலைசிறந்த நிறுவனங்கள் / புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் / திறன் மேம்பாட்டு நிறுவனங்களில் சேர்க்கையையும் இந்தத் தொடர் பயிற்சிகள் மூலம் உறுதி செய்யப்படும்.
தமிழ்நாடு அரசுத்துறை மற்றும் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள், ஒன்றிய அரசின் வேலைவாய்ப்புகள், பிற மாநிலங்களின் வேலைவாய்ப்புகள் ஆகிய அனைத்தும் இத்திட்டத்தின் கீழ் அறிவிப்புகளாக வெளியிடப்பட்டு, பயிற்சிகள் ஒருங்கிணைக்கப்படும். பயிற்சி பெற்ற பயனாளிகள் வேலைவாய்ப்பு பெறுவதையும், அதைத் தொடர்வதையும், தொடர்ந்து கண்காணிக்கப்படும். இதைத் தவிர, ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு முகாம்களும் தேவைகளின் அடிப்படையில் நடத்தப்படும். இத்திட்டத்தின் அனைத்து விவரங்களும் அடங்கிய வலைதள பலகை (Portal) உருவாக்கப்படும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நேரடி கண்காணிப்பில், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை இப்புதிய திட்டமான நான் முதல்வன் திட்டத்தை ஒருங்கிணைக்கும். மேலும், மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு இத்திட்டத்தை செயல்படுத்தும்.
