
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருச்சி என்.சி.சி (NCC) குழுமத்தின் கட்டளை அதிகாரி (Group Commander) கர்னல் கெளரவ் சிரோஹி அவர்கள், காரைக்குடியில் உள்ள 9 (தமிழ்நாடு) பட்டாலியன் என்.சி.சி பிரிவிற்கு வருகை தந்து, என்.சி.சி மாணவர்களுடனும் பள்ளி குழந்தைகளுடனும் இணைந்து இந்நாளைச் சிறப்பாகக் கொண்டாடினார்.

அங்கு வருகை தந்த குழுமத்தின் கட்டளை அதிகாரியை, என்.சி.சி பட்டாலியனின் தற்காலிகப் பொறுப்பு அதிகாரி (Officiating Officer Commanding) லெப்டினன்ட் கர்னல் துர்கேஷ் உபாத்யாய் அவர்கள் வரவேற்றார். தொடர்ந்து என்.சி.சி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை (Guard of Honour) அவருக்கு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முறையான அறிமுக நிகழ்விற்குப் பிறகு, என்.சி.சி அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களுடன் தேநீர் விருந்தின் போது கலந்துரையாடல் நடைபெற்றது.

தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் பள்ளி குழந்தைகளிடையே உரையாற்றிய கட்டளை அதிகாரி அவர்கள்; தேசப்பற்று, ஒழுக்கம், ஒற்றுமை மற்றும் பொறுப்புள்ள குடிமக்களாகத் திகழும் உயரிய பண்புகளைப் பின்பற்றுமாறு அவர்களை ஊக்கப்படுத்தினார். மேலும், சுதந்திர தின விழாவில் மாணவர்களின் ஆர்வமிக்க பங்கேற்பையும் உற்சாகத்தையும் அவர் பாராட்டினார்.

இவ்வருகை, என்.சி.சி மாணவர்கள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு ஒரு நினைவுகூரத்தக்க, ஊக்கமளிக்கும் நிகழ்வாக அமைந்ததுடன், இளைஞர் மேம்பாடு, தேசக் கட்டமைப்பு மற்றும் இளைய தலைமுறையினரிடையே வலுவான தேசப்பற்றை உருவாக்குவதில் என்.சி.சி-யின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியது.
ஜெய்ஹிந்த்
செய்தி & படங்கள்
சாய் தர்மராஜ்
